Saturday, June 22, 2019

இயேசு பிரதான ஆசாரியனா?

இயேசு பிரதான ஆசாரியனா?

கேள்வி: இயேசு பிரதான ஆசாரியனாக இருந்த காரணத்தினால்தான் தன்னையே பலியாக கொடுத்தார் என்பது சரியா?

பதில்: தான் ஒரு பிரதான ஆசாரியனாக இருந்த காரணத்தினால் இயேசு தன்னையே பலியாக கொடுத்தார் என்று புதிய ஏற்பாட்டில் உள்ள எபிரேயிருக்கு எழுதின நிரூபத்தில்  கூறப்பட்டிருப்பது உண்மைதான்.
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். [எபி :9:11-12].

புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இயேசு,அறியாமல் கூட,ஒரு கட்டளையையும் மீறமுடியாது[மத் 5:17-18].ஒரு பாவம் கூட செய்யாமல் தன்னுடைய வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்[எபி 4:15,1யோவ 3:5].

இயேசு இறக்கும் அந்த தருவாய் வரை மோசேயின் நியாயப்பிரமாணம் உயிரோடு இருந்தது என்று புதிய ஏற்பாடு கூறுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.பவுல் கீழ்கண்டவாறு எழுதுகிறார்,
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;[கொலெ 2:14]
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.[ரோம 10:4] .
இயேசு இறக்கும் அந்த தருவாய் வரை நியாயப்பிரமாணம் வழக்கத்தில்தான் இருந்தது என்றால்  அவர் ஒரு ஆசாரியனாக இருக்க முடியாது.மோசேயின் நியாயப்பிரமாணம் இருக்கும் வரை,ஆரோனின் வம்சாவழியில் இல்லாத ஒருவர் ஆசாரியானாக இருக்க முடியாது[யாத் 29:9].

நியாயப்பிரமாணத்தின் முடிவாக தான் இருக்கிறேன் என்பதை மத் 5:17-18-ல் கூறும் இடத்தைக்கொண்டு நாம் பார்த்தல் கூட,அவர் இறக்கும் அந்த நொடிக்கு முன்னர் வரை ஆரோனின் ஆசாரியப்பட்டத்தை யாராலும் முடிவுக்கு கொண்டுவர முடியாது என்பது நமக்கு புரியும்.

மேலும் மத் 1:3 மற்றும் லூக் 3:33-ன் படி இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்தவராவார்.ஆரோனின் வம்சாவழியில் அவர் இல்லாத காரணத்தினால் அவரால் ஆசாரியனாக முடியாது[நியாயப்பிரமாணத்தின் காரணமாக].

தன்னுடைய வாழ்நாள் முடியும் வரை அவர் ஆசாரியனாக முடியாது.நியாயப்பிரமானத்திற்கு கட்டுப்பட்டுதான் அவர் வாழ வேண்டும்.

இயேசு பிரதான ஆசாரியனாக இருந்தார் என்று யாராவது கூற விரும்பினால்,"நியாயப்பிரமானத்திற்கு பின்" என்று கூறப்படும் காலமாகிய இயேசு இறந்த காலத்திற்கு பிந்தைய காலத்தைத்தான் குறிப்பிட வேண்டும்.

இயேசு பிரதான ஆசாரியனாக இருந்து தன்னையே பலியாக கொடுத்தார் என்பதில் மற்றுமொரு சங்கடம் உள்ளது.எபி 9:14-ன் படி தன்னை பலியாக கொடுத்தார்.கீழ்கண்ட மற்றொரு வசனத்தை கவனியுங்கள்,
மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,
அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். [லேவி 17:8-9]
இயேசு தேவாலயத்திற்கு வெளியே தன்னை பலியாகக் கொடுத்திருக்கிறார். எனவே மோசேயின் நியாயப்பிரமானத்தின்படி   அவர்  அறுப்புண்டு போக  வேண்டும்.

இயேசுவின் காலத்தில் "ஆசரிப்பு கூடார வாசல்" என்பது "தேவாலயத்திற்குள்" என்பது ஆகும்.

மத் 5:17-ன் படி அவர் நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்க வேண்டும் என்றால்,மோசேயின் நியாப்பிரமானத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் படியும் நிறைவேறியிருக்க வேண்டும்.எனவே இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாக இல்லை.

"இயேசு பிரதான ஆசாரியனாக இருந்தாரா?" மற்றும் "அவருடைய இறப்பு நியாயப்பிரமாணத்தின் படி பலிதானா?"

நியாயப்பிரமாணம் கூறுகிறது,"நிச்சயமாக இல்லை".


https://jewsforjudaism.org என்ற பக்கத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் இரா.இருதயராஜ்.

Saturday, June 15, 2019

கிறித்தவ திருமறையில் கர்த்தர் என்ற வார்த்தையின் பயன்பாடு

கிறித்தவ திருமறையில் கர்த்தர் என்ற வார்த்தையின் பயன்பாடு 

கர்த்தர் என்பவர் யார்?அந்த வார்த்தையின் பொருள் என்ன?இது போன்ற கேள்விகள் பைபிளை படிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.பழைய ஏற்பாட்டில் ஏறத்தாழ 7000 முறை இவ்வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கும்.

யாரைக் குறிக்க இந்த கர்த்தர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது? சர்வ வல்ல இறைவனாம் "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு போன்றோர் வழிபட்ட கடவுளை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.இம்மொழியில் உயிரெழுத்துக்கள் கிடையாது.எனவே உச்சரிப்பு மிக கடினமாக இருக்கும்.இக்கடினத்தை போக்க பிற்காலத்தில் உயிரெழுத்துக்களுடைய ஒலியைக் கொடுப்பதற்கு "புள்ளிகள்" பயன்படுத்தப்பட்டன.

பழைய ஏற்பாட்டில் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் நேரடியாக பேசியிருப்பார்.இந்த கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட பெயர் உள்ளது.இஸ்ரயேல் மக்கள் இப்பெயரை மிகவும் போற்றினர்.இதற்கு ஆதாரமாக யாத்திராகமம் 3:15-ஐ  நாம் படிக்கலாம்.
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
தடித்த எழுத்துக்களில் "கர்த்தர்" என்ற வார்த்தை உள்ளதை கவனியுங்கள்.

கடவுள் மோசேயிடம் தன்னுடைய பெயரை அறிவிக்கிறார்.மேலும் ஒரு கட்டளையைக் கொடுக்கிறார்.
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.[யாத் 20:7]
அவருடைய பெயரை நாம் மிக கவனமாக பயன்படுத்த வேண்டும்.மிகவும் போற்ற பட வேண்டிய அவருடைய நாமத்தை உச்சரிக்க பயப்பட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருடைய பெயரை உச்சரிக்க இஸ்ரேல் மக்களை தடை செய்தனர்.

அவருடைய பெயரை உச்சரிக்காமல் எப்படி அவருடைய வார்த்தைகளை மக்களுக்கு சொல்வது?தீர்க்க தரிசிகள் மிகவும் அதிகாரத்தோடு அவருடைய பெயரை பயன்படுத்தினர்.ஆனால் சாதாரண மக்கள் அவருடைய பெயரை அப்பெயருக்குரிய மரியாதையோடு பயன்படுத்த வில்லை.எனவே உச்சரிக்க தடை செய்ய பட்டது.

ஆனால் வசனங்களை பயன்படுத்த வேண்டுமே?அவருடைய நாமத்திற்கு பதிலாக "ADONAI" என்ற வார்த்தையை பயன்படுத்தி யூத பைபிளை எழுதினர்.கடவுள் மீதுள்ள மிகுந்த மரியாதையின் நிமித்தம் இது செய்யப்பட்டது.

"ADONAI" என்ற வார்த்தையின் பொருள் "என் ஆண்டவன்[My Lord ]" என்பதாகும்."אֲדֹנָי" என்பது ஹீப்ரு மொழியில் "ADONAI".

ஆனால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது கடவுளுடைய பெயர் வரும் இடங்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"ADONAI" என்ற வார்த்தையை ஆங்கில பைபிளில் "LORD" என்று மொழிபெயர்த்தனர்.தமிழ் மொழியில் இது "ஆண்டவனே" என்று பொருள் தரும்.

கடவுள் மீதுள்ள பயம் காரணமாகவும் மரியாதையின் காரணமாகவும் ஹீப்ரு பைபிளில் அவருடைய பெயர் மாற்றப்பட்டது.இந்த செய்தி தெரியாமல் ஆங்கில பைபிளில் அவ்வார்த்தைக்குறிய பொருளை தரும் ஆங்கில வார்த்தையான "LORD" பயன்படுத்தப்பட்டது.

ஆங்கிலேர்கள் மிகச்சாதாரணமாக "LORD" என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.மனிதர்களில் கனவான்களை குறிக்க இது பயன்படுகிறது. "My Lord" என்று சாதாரணமாக அழைப்பார்கள்.

தமிழுக்கு வரும் பொழுது இதே முறை பயன் படுத்தப்பட்டது.ஆனால் ஒருபடி மேலாக "கர்த்தர்" என்ற சற்று கணம் கொடுக்கும் வார்த்தையை பயன்படுத்தினர்.

நாம் இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டியது "கர்த்தர்" என்ற வார்த்தை ஒரு கனமுள்ள மனிதனை குறிக்க பயன்பட வில்லை.பதிலாக சர்வ வல்ல இறைவனை குறிக்க பயன்படுகிறது.

"LORD" என்ற ஆங்கில வார்த்தையின் பிரச்சினை என்னவென்றால் அதை யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.நீதிபதியை கூட "My Lord" என்கின்றனர்.

இக்குழப்பத்தின் அடிவேரை தேடி சென்றோமானால்,கடவுள் மீதுள்ள அளப்பரிய அன்பின்,மரியாதையின் விளைவாக அவருடைய பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக வேறு வார்த்தையை பயன்படுத்தினர்.

புதிய ஏற்பாடு:

இங்கு இயேசு என்ற ஒரு மனிதனை மிகவும் கணம் செய்கின்றனர் இயேசுவை பின்பற்றிய ஒரு குறிப்பிட்ட யூத மனிதர்கள் இருந்தனர்.அவர்களை பின்பற்றிய கிரேக்கர்களும் அவ்வாறே செய்கின்றனர்.கிரேக்கர்கள் ஏற்கனவே பல கடவுள் வழிபாட்டைக் கொண்டிருந்தவர்கள்.

இந்த இயேசுவின்   வார்த்தைகளை அவருடைய சீடர்கள் தொகுத்து எழுதும் பொழுது "kurios[κύριος]" என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.மனிதர்களில் கனவான்களை குறிக்கவே இவ்வார்த்தை பயன்படுகிறது.இயேசுவின் மீதுள்ள பற்றின் காரணமாக அவர்கள் இவ்வார்த்தையை பயன்படுத்தினர்.இதன் விளைவு,புதிய ஏற்பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில் "Lord"-ன் பயன்பாடு.

இப்பொழுது ஆங்கில மொழிபெயர்ப்பில் சர்வ வல்ல இறைவனும் "Lord" என்று குறிப்பிடப்படுகிறார்.புதிய ஏற்பாட்டில் இயேசுவும் "Lord" என்று குறிப்பிடப்படுகிறார்.விளைவு இயேசு கடவுளாகி விட்டார்.எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!!

முடிவு:

பழைய ஏற்பாட்டில் ஏறத்தாழ 7000 முறை கடவுளுடைய பெயர் வருகிறது.தீர்க்கதரிசிகள் மிகவும் அதிகாரத்தோடு "கர்த்தர் கூறுகிறார்" என்றனர்.கர்த்தர் என்ற இடத்தில கடவுளுடைய பெயர் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7000 முறை அவருடைய பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்றால் எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கிறது.புதிய ஏற்பாட்டில் அது இயேசுவை குறிக்கிறது.

கடவுளையும் இயேசுவையும் ஒன்றாக்குவது மடத்தனம், முட்டாள்தனம்."Lord" என்ற வார்த்தையின் பயன்பாடுதான் இதற்கு காரணம்.புதிய ஏற்பாட்டை பழைய ஏற்பாட்டோடு இணைத்து ஒரே புத்தகமாக வெளியிட்டது பெரும் தவறு.

தமிழ் மொழிபெயர்ப்பு எல்லாவற்றிலும் மேலான ஒரு தவறை செய்தது.பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாடு இரண்டிலுமே ""Lord" என்ற வார்த்தையை "கர்த்தர்" என்று மொழிபெயர்த்து விட்டனர்.

பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்பது "சர்வ வல்ல இறைவனை குறிக்கிறது.புதிய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்பது இயேசுவை குறிக்கிறது.

புதிய ஏற்பாட்டில் ஒரு சில இடங்களில் "கர்த்தர்" என்ற வார்த்தை கடவுளையே குறிக்கும்.எடுத்துக்காட்டாக ரோமர் 4:8-ஐ பாருங்கள்.
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
இங்கே "கர்த்தர்" என்ற வார்த்தை தாவீது வழிபட்ட கடவுளை குறிக்கிறது.எனவே தமிழ் பைபிள் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.மற்ற இடங்களில் இயேசுவை குறிக்கிறது.

அதனால் இன்று கடவுளை இயேசுவோடு ஒன்றாகி விட்டனர்.எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே.ஆபிரகாம் யாரை வழிபட்டாரோ அவரே அந்த இறைவன்.அவரை யாருக்கும் ஈடு இணையாக்க முடியாது.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

யோவான் 13:27-விளக்கம்

யோவான் 13:27-விளக்கம் 

முதலில் இந்த வசனம் என்ன கூறுகிறது என்று பார்த்து விடுவோம்.
அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
மேலும் சில பொதுவான கருத்துக்களையும் நாம் பார்த்து விடுவோம். 

பழைய ஏற்பாட்டில் இல்லாத கருத்துக்கள் புதிய ஏற்பாட்டில் இருப்பதை நாம் காணலாம்.பழைய ஏற்பாடு "ஒரே கடவுளாகிய" இஸ்ரயேலின் கடவுளை மட்டும் பேசுகிறது.அவரைத்தவிர வேறு யாரையும் வழிபடுதலை கடுமையாக தடைசெய்கிறது.அவருக்கு சமமாக யாரையும் வைக்கவும் நம்மை தடை செய்கிறது.

அவரை மீறி எதுவும் நடக்க இயலாது.அவர் நினைத்தது மட்டுமே நடக்கும்.ஆனால் பல கடவுள் வழிபாட்டில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட கருத்துக்களை உடையவர்கள் அல்ல.

தீமைகளுக்கென்று தனி கடவுள் ஒருவன் உள்ளான்.பாதாள உலகின் தலைவன் அவன்,அணைத்து தீமைகளுக்கும் அவனே காரணம்,இந்த உலகம் அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது,அருவருக்கத்தக்க எண்ணங்களுக்கு அவனே காரணம்,கடவுளுடைய எண்ணங்களுக்கு மாறாக அவன் செயல்படுவான் போன்ற கருத்துக்களை பல கடவுள் வழிபாட்டைக் கொண்டிருப்பவர்கள் வைத்திருக்கின்றனர்.நாட்டுக்கு நாடு தீமை கடவுளின் பெயர் மட்டும் மாறுபடலாம் ஆனால் கருத்துக்கள் மேற்கூறியவைகள்தான்.

ஒரு கடவுள் வழிபாட்டை உடைய யூத முறைகள் மேற்கூறிய கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபடுகிறது.அவைகளில் சில,
  • கடவுள் ஒருவரே,அவர் கர்த்தர்.ஆபிரகாம் எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த கடவுள்தான் அவர்.
  • அவருக்கு மேலானது என்று எதுவும் இல்லை.
  • அவரை மீறி எதுவும்,யாரும் செயல் பட முடியாது.
இப்பொழுது யோ:13:27 வசனத்திற்கு வருவோம்.அங்கே சாத்தான் யூதாசிற்குள் புகுந்தான் என்பது போன்று உள்ளது.இந்த உள்ளே புகுந்த "சாத்தான்" யார்?அவன் என்ன செய்ய போகிறான்?
  • உள்ளே புகுந்த "சாத்தான்" என்பவன் தீமைகளுக்கெல்லாம் காரணம்.
  • அவன் யூதாசின் இருதயத்திற்குள் நுழைந்து இயேசுவை  காட்டிக்கொடுக்க செய்ய போகிறான்.
  • அவனுடைய பெயர் "சாத்தான்" என்பதுதான்.
  • யூதாஸ் கேடு செய்ய காரணம் "இந்த சாத்தான்".இயற்கையாகவே இந்த யூதாஸ் நல்லவன்.
  • இந்த சாத்தானுக்கு எதிராகத்தான் இயேசு யுத்தம் செய்ய போகிறார்.
  • இந்த "சாத்தான்" கடவுளின் விரோதி.கடவுளுடைய எண்ணங்களுக்கு விரோதி.
  • எனவேதான் கடவுளின் குமாரனாகிய இயேசுவை யூதர்களிடம் காட்டிக்கொடுக்க போகிறான்.
மேற்கூறிய எண்ணங்களின் அடிப்படையில்தான் புதிய ஏற்பாடு எழுதப்பட்டுள்ளது.இங்கேதான் புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் மாறுபடுகிறது.கடவுளுக்கு விரோதமாக எவராலும் செயல் பட முடியாது என்று பழைய ஏற்பாடு கூறுகிறது.அப்படி இருப்பவர்தான் கடவுளும் கூட.

ஆனால் புதிய ஏற்பாடு கிரேக்கர்களுடைய கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.எனவேதான் "கடவுளின் எதிரியான சாத்தான்" என்கிற அடிப்படையில் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே புதிய ஏற்பாடு என்பது கிரேக்கர்களுக்கான ஒரு புத்தகம் ஆகும்.

சாத்தான் என்பவன் நாம் நினைப்பது போன்று ஒரு தனியான,கடவுளுடைய எண்ணங்களுக்கு விரோதமான ஒருவன் அல்ல.பழைய ஏற்பாட்டின் படி கடவுளுக்கு விரோதி என்று ஒருவன் இருக்கவே முடியாது.பல கட்டுரைகள் "சாத்தான்" என்பவனைப்பற்றி எழுத்து உள்ளேன்.அதை படித்து பார்த்தால் புரியும்.

சரி,சாத்தான் என்பவன் கடவுளுக்கு விரோதி என்றே கொள்வோம்.உலக மக்களின் பாவங்களுக்காகவே இயேசு மரிக்க வேண்டியிருக்கிறது  என்பதே கடவுளின் எண்ணம் என்றே கொள்வோம்.
அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.[ரோம 4:25].
அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; [கலா :1:4]
[மேற்கூறிய இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண் படும்] 

இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இயேசு நம்முடைய பாவங்களுக்காக பலியாக வேண்டி உள்ளது.இது தேவனுடைய சித்தம்.எனவே இயேசு மறு பேச்சு பேசாமல் பலியாக வேண்டும்.

இயேசு பலியாகி விட்டால்,நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.நாம் கடவுளுடைய பிள்ளைகளாகி விடுவோம் இது நமக்கு நல்லது,சாத்தானுக்கு?

சாத்தானுக்கு இது கெட்ட தகவல்.எனவே இயேசு மரிப்பதை அவன் தடுத்தாக வேண்டும்.ஆனால் இயேசு மரிக்க அவன் உதவி செய்கிறான்.யூதாசின் எண்ணங்களுக்குள் புகுந்து அவரை காட்டி கொடுக்க செய்கிறான்.என்ன ஒரு முரண்பாடு?

இப்பொழுது சொல்லுங்கள்.சாத்தான் நல்லது செய்தானா? இல்லை கெட்டது செய்தானா? வசனத்தின் படி நமக்கு,அதாவது இயேசுவுக்கு கெட்டது செய்கிறான்.ஆனால் கடவுளுக்கு நன்மை செய்கிறான்.இயேசு இறக்க உதவி செய்கிறானே.ஆனால் பல இடங்களில் அவனை திட்டி எழுதியிருக்கிறார்களே ஏன்?

இயேசுவும் கூட ஒரு இடத்தில பேதுருவைப்பார்த்து,"எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்" என்று கூறுகிறாரே ஏன்?

தவறுதலான புரிதல் மற்றும் கிரேக்க கலாச்சார குழப்பம்.இவைகள் அனைத்தின் தாக்கம்தான் புதிய ஏற்பாடு.புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள "சாத்தான்" என்ற கருத்து கிரேக்கர்களுடையது.யூதர்களுடையது அல்ல.பழைய ஏற்பாட்டினுடையதும் அல்ல.

சாத்தான் பற்றிய என்னுடைய கட்டுரையை படித்து பாருங்கள்.

முடிவு:

அதாவது,சாத்தான் என்ற வார்த்தையை கிரேக்க கலாச்சாரத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டதன் விளைவு புதிய ஏற்பாடு.சாத்தான் என்பவனை தனியான ஒருவனாக எண்ணுவதன் மூலம் இயேசுவும் இத்தவறான கருத்தைக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது.

கிரேக்க தாக்கத்தால் பாதிக்கப்பட்டு நிறைய யூதர்கள் அக்காலகட்டத்தில் இருந்தனர்.கிரேக்கர்களுடைய அழகு,அறிவு,கலாச்சாரம்,காலை,இலக்கியம் போன்றவைகளால் யூத மக்களில் பல பேர் பாதிக்க பட்டனர்.அவர்கள் புது ஒரு கலவையை உருவாக்க முனைந்திருக்கலாம்.

இதே எண்ணத்தைத்தான் இயேசுவும் கொண்டிருந்தார் என இப்பொழுது நமக்கு தெரிகிறது.இயற்கையாக இயேசு ஒரு யூதர்.அப்படியிருக்க "சாத்தான்" என்ற வார்தையைப் பற்றிய கிரேக்க கருத்தை எப்படி உள்வாங்கி கொண்டார்? பழைய ஏற்பாட்டை மறுதலித்து ஒருவர் எப்படி "மேசியாவாக" இருக்க முடியும்?

தங்களுடைய பழைய ஏற்பாட்டு அறிவு,கிரேக்கர்களின் தாக்கம் போன்றவைகள் இணைந்து ஒரு புதிய புரிதலை நோக்கி தள்ளி இருக்கலாம்.அதன் விளைவே புதிய ஏற்பாட்டு கருத்துக்கள்.இதை குறித்து பாளை ஏற்பாட்டில் கடவுள் ஏற்கனவே எச்சரிக்கை செய்திருக்கிறார்.
அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;
அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள். [யாத் 34:15,16]
புதிய ஏற்பாடு கூறுவது போல் கடவுள் மூன்று பேராக இல்லை.அவர் ஒரே ஒருவர்தான்.அவர் கர்த்தர்.அவர் ஆபிரகாமின் கடவுள்.அவரை நாம் பக்தியுடன் பணிந்து கொள்வோமாக!

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1-lqGOeVo7ZwNs2lUbR2HOXq2HYbtiSTZ/view?usp=sharing

Friday, June 14, 2019

இயேசுவுக்கு அன்பான சீடன்

இயேசுவுக்கு அன்பான சீடன் 

கடைசியாக எழுதப்பட்ட நற்செய்தி புத்தகம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? யோவான் எழுதிய நற்செய்தி புத்தகம்தான் கடைசியாக எழுதப்பட்ட புத்தகம்.இயேசு இறந்த பிறகு ஏறத்தாழ 70 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது.

இப்புத்தகத்தின் கடைசி அதிகாரம் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக உள்ளது.இப்புத்தகம் முழுமையுமே முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது.முதல் மூன்று புத்தகங்களுக்கும் இதற்கும் கடலளவு வேறுபாடுகள் உள்ளன.

இக்கட்டுரையின் நோக்கம் யோவான் புத்தகத்தின் கடைசி அதிகாரமான 21-ம் அதிகாரத்தைப் பற்றி பேசுவதே ஆகும்.இந்த அதிகாரம் பற்றிய என்னுடைய சில கருத்துக்களை பாருங்கள்.
  • 21-ம் அதிகாரம் இயேசுவின் மூன்றாம் காட்சிஅளித்தலைப் பற்றி விவரிக்கின்றது.
  • மற்ற நற்செய்தி புத்தகங்களில் இக்கதை கிடையாது.
  • சீடர்கள்,குறிப்பாக சீமோன் பேதுரு, என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கூறுவதாக இக்கதை உள்ளது.
  • சீமோன் பேதுருவின் மரணம் பற்றி இங்கு தகவல் தரப்பட்டுள்ளது.
இந்த அதிகாரத்தில் சீமோன் பேதுரு எப்படி மரணமடைவான் என்று "இயேசுவுக்கு அன்பான சீடன்" குறிப்பிடுவதாக உள்ளது.இதைப்பற்றித்தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

முதலில் "இயேசுவுக்கு அன்பான சீடன்" யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.முக்கியமாக அந்த சீடனின் பெயர் மட்டும் குறிப்பிடப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.வசனம் யோ:13:23-ஐ பார்ப்போம்.
அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
இவ்வளவுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த சீடனுடைய  பெயர் எங்கும் குறிப்பிடப்படவே இல்லை.ஏன்? இப்புத்தகத்தை எழுதியவர் அனைத்தையும் மிக விரிவாக எழுதியுள்ளார்.பெயர் மட்டும் வேண்டும் என்றே மறைக்கப்பட்டுள்ளது போன்று தோன்றுகிறது.மேலும் இப்புத்தகத்தை எழுதியவரும் அவர்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.[யோ:21:24].
வசனங்கள் 20 முதல் 24 வரை படித்து பாருங்கள்.யார் இப்புத்தகத்தை எழுதியது என்று தெரியும். இப்பொழுது நமது கேள்வி,
சீமானின் மரணத்தைப் பற்றி "இந்த இயேசுவுக்கு அன்பான சீடனுக்கு" எப்படி தெரியும்?
21-ம்  அதிகாரம் கூறும் கதை நடந்ததாக கருதப்படும் காலகட்டம் எது? கி.பி 33-ம் ஆண்டு.ஏனென்றால் அப்பொழுதுதான் இயேசு இறந்தார்.மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்த பின்னர் சீடர்களிடம் பேசுகிறார்.

வசனம் 21:19-ஐ படித்து பாருங்கள்.
இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.
"இன்ன விதமான மரணம்" என்றால் என்ன?: 

சீமோன் எப்படி மரணமடைய போகிறான் என்று இயேசுவுக்கு தெரிந்திருக்கிறது.அதைத்தான் இப்புத்தகத்தின் இந்த வசனம் குறிக்கிறது.இயேசுவுக்கு தெரிந்திருப்பது இப்புத்தகத்தின் ஆசிரியருக்கும்,அதாவது யோவானுக்கும்,தெரிந்திருக்கிறது.

என்றால்,இயேசு இறந்தபிறகும் பல வருடங்கள் வாழ்ந்த பேதுருவும் தன்னுடைய கடிதங்களில் எங்கும் இதைப்பற்றி குறிப்பிட வில்லை.பல வருடங்களுக்கு முன்னரே இத்தகவல் தீர்க்க தரிசனமாக தெரிவிக்கப்பட்டாயிற்றே,ஏன் பேதுரு இத்தகவலை எங்கும் தெரிவிக்க வில்லை? மற்ற சீடர்களும் கூட ஏன் இத்தகவலை எழுத்து மூலமாக தெரிவிக்க வில்லை? மத்தேயு,மாற்கு,லூக்கா போன்றோரும் ஏன் தெரிவிக்க வில்லை?

மரணமடைதல் என்பது வேறு. இன்ன விதமாக மரணமடைதல்  என்பது வேறு.சீமோனுக்கும்,யோவானுக்கும் கூட இருந்த மற்ற சீடர்களுக்கும் இது தெரிந்திருக்கிறது என்பது 21-ம் அதிகாரம் மூலமாக நமக்கு தெரிகிறது.ஆனால் ஒருவர் கூட இதைப்பற்றி எழுத வில்லை.

சரி சீமோன் பேதுரு என்ன விதமாக மரணமடைந்தான்?பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
"St. Peter is believed to have died as a martyr for his faith. Although his death is not described in Scripture, numerous writers of the time (or shortly thereafter) described his death as having occurred in Rome during the reign of the emperor Nero in 64 CE. According to tradition, St. Peter was crucified upside down because he felt unworthy to die in the same manner as Jesus Christ."
அதாவது "நீரோ" மன்னன் கால கட்டத்தில் அவனால் தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டான்.முக்கியமான கேள்விகள் எனக்கு எழுகின்றன.

  • தலை கீழாக சிலுவையில் அறையப்படுதல் என்ற தகவலைத்தான் இயேசு யோ 21:19-ல் கூறினாரா?
  • "இன்ன விதம்" என்று 21-ம் அதிகாரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • எனவே "தலை கீழாக சிலுவையில் அறையப்படுதலைத்தான்" யோவான் குறிப்பிடுகிறார்.
  • அப்படியென்றால் இயேசுவும் இதைத்தான் குறிப்பிட்டாரா?
  • எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம் இது! யோவான் நற்செய்தி புத்தகத்தை தவிர வேறு யாரும் இதை ஏன் குறிப்பிடவில்லை?
எனவே 21-ம் அதிகாரத்தில் பேசப்பட்டவைகள் அனைத்தும் கி.பி 33-ம் ஆண்டில் நடந்தவைகளாக நாம் கருத முடியும்.ஆனால் சீமோன் பேதுரு கொல்லப்பட்ட வருடம்,ஆய்வாளர்களின் கருத்துப்படி,கி.பி 64 அல்லது கி.பி 67.

அப்படியென்றால்,பேதுரு இறந்த பிறகு எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் "இடைச்செருகலாக" ஏன் இச்செய்தி இருக்க கூடாது?யாருக்கு தெரியும்? மற்ற ஆசிரியர்கள் எவருமே குறிப்பிடாத ஒன்றைதானே யோவான் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே பேதுரு இறந்ததை பார்த்து,அந்நிகழ்வை தன்னுடைய எழுத்துக்களில் யோவான் சேர்த்திருக்கிறார்.முன்னரே இயேசு இதைப்பற்றி கூறியதாக பொய் சொல்லியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் பேதுரு இறந்த பிறகுதானே யோவான் எழுதுகிறார்.

அதாவது இயேசு இறந்து ஏறத்தாழ 30 வருடங்கள் கழித்து சீமோன் பேதுரு மரணமடைகிறான்.இயேசு இறந்து 70 வருடங்கள் கழித்து "யோவான் நற்செய்தி" புத்தகம் எழுதப்படுகிறது.
  • சீமோன் பேதுரு ஒரு முக்கியமான சீடன்.
  • அவனுடைய மரணத்தைப்பற்றி இயேசு முன்னறிவிக்கிறார்.
  • ஆனால் முதல் மூன்று ஆசிரியர்களுக்கும் [மாற்கு,மத்தேயு,லூக்கா போன்றோர்]எப்படி இத்தகவல் தெரியாமல் போனது? 
  • அவர்கள் இத்தகவலை மறைத்தனரா? அல்லது தெரிய வில்லையா?
  • யோவானுக்கு[இயேசுவுக்கு அன்பான சீடன் என்று நம்பப்படுகிறவன்]மட்டும் எப்படி தெரிந்தது?
  • சீமோன் பேதுருவின் மரணத்திற்கு பிறகே இப்புத்தகம் எழுதப்படுகிறது.எனவே,நடந்த ஒரு நிகழ்வை,நடக்க போகும் ஒரு நிகழ்வாக ஏன் எழுதிருக்கக்கூடாது?
இயேசுவின் வாழ்வில் நடந்தவைகளைத்தானே நற்செய்தி புத்தகங்கள் குறிப்பிடுகின்றன.அப்படியிருக்க,இந்த முக்கியமான செய்தி மட்டும் எப்படி மற்ற மூவருக்கும் தெரியாமல் போனது?

முடிவு:

புதிய ஏற்பாடு என்பது "ஒரு புனையப்பட்ட கதை தொகுப்பு" போன்று தோன்றுகிறது.இயேசுவை "கிறிஸ்து" என்றும்,தெய்வீகத்தன்மை கொண்டவர் என்றும் நிரூபிப்பதற்காக எழுதப்பட்டவைகள்தான் "புதிய ஏற்பாடு".

ஆனால் நாமோ இன்று ஒயேசுவை கடவுளாக வழிபடுகிறோம்.இதை "மெய்யான கடவுளாம்,ஆபிரகாமின் கடவுள்" எப்படி பார்ப்பார்?

ஆபிரகாமின் கடவுள் மட்டுமே கடவுள்.அவரைத்தவிர வேறு கடவுள் இல்லை.எப்படி இதை அறுதியிட்டு கூற முடியும்?
    நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை[ஏசா 45:5]
கர்த்தராகிய "ஆபிரகாமின் கடவுளை அனைவரும் பயபக்தியுடன் பணிவோமாக. 

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1Fl85PlAqpOC9dCrH-RJiUlgMBPdQ38oV/view?usp=sharing

உயிர்த்தெழுதல் முரண்பாடுகள்

உயிர்த்தெழுதல் முரண்பாடுகள் 


இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். மூன்றாம் நாளிலே அவர் உயிரோடு எழுந்தார் அல்லது எழுப்பப்பட்டார். நான்கு நற்செய்தி புத்தகங்களும் இதை குறிப்பிடுகின்றன.இதன் மூலம் இப்புத்தகங்கள் நமக்கு கூறும் கருத்து என்ன?
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது[யோ:20:31].
அதாவது இயேசு தேவனுடைய குமாரன் என்றும் கிறிஸ்து என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அவரை கடவுள் என்றும் மூன்று கடவுள்களில் அவர் ஒருவர் என்றும் நம்பிக்கொண்டு சர்வ வல்ல கடவுளாம் "ஆபிரகாமின் கடவுளை" புறந்தள்ளி இருக்கிறோம்.

இயேசு கடவுள்தான் என்பதற்கு முக்கிய தடயம் அவர் உயிரோடு எழுந்த நிகழ்வு ஆகும்.இறந்த பிறகு உயிரோடு எழும்புதல் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரும் ஆச்சரியமான நிகழ்வுதான்.நான்கு நற்செய்தி புத்தகங்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன.

இந்த நான்கு நற்செய்தி புத்தகங்களும் இயேசு இறந்த உடனே எழுதப்பட்டவைகள் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.முதல் புத்தகமான "மாற்கு எழுதின சுவிசேஷம்",இயேசு இறந்த பிறகு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இப்புத்தகங்கள் கூறும் நிகழ்வை நாம் நம்ப வேண்டும் என்றால்,அந்நிகழ்வு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லது அரசு பதிவுகள் என ஏதாவது நமக்கு வேண்டும்.ரோம அரசின் கட்டுப்பாட்டில் யூத மக்கள் இருந்தனர் என்பது நமக்கு தெரியும்.அந்த ரோம அரசு வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

ஆனால் உயிர்த்தெழுதல் நடந்ததாக ஒரு சான்று கூட நமக்கு இல்லை.எனவே நற்செய்தி ஆசிரியர்களான மாற்கு, மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் இவர்களைத்தான் நாம் இப்பொழுது நம்ப வேண்டி உள்ளது.

இவர்கள் எழுதிய புத்தகங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் பெரும் குளறுபடிகளை நம்மால் காண இயலுகிறது.உயிர்த்தெழுதல் என்ற ஒன்றைக்கொண்டுதான் "இயேசுவை" நிரூபிக்க முடியும்.எனவே நான்கு பேரும் உயிர்த்தெழுதல் நிகழ்வை விவரிக்கின்றனர்.நான்கு ஆசிரியர்களும் முற்றிலுமாக வேறுபடுகின்றனர்.

இப்பொழுது நமக்கு கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன.
  • இப்புத்தகங்களை எழுதும் பொழுது தங்களை ஏன் அறிமுகப்படுத்திக்கொள்ள வில்லை? "இன்னாருடைய மகன் இன்னார் எழுதுவது" என்று ஏன் குறிப்பிட வில்லை?
  • அனைத்து தீர்க்கதரிசிகளும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகே எழுத ஆரம்பிக்கின்றனர்.
  • பல ஆண்டுகள் கழித்து ஏன் எழுதினர்?
  • இடைப்பட்ட ஆண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தனர்?
  • பல நிகழ்வுகளில் ஓரிரு செய்திகளை விட்டிருக்கலாம்,ஆனால் ஒரே நிகழ்வை முற்றிலும்[நடந்த இடம் முதற்கொண்டு]வேறாக எப்படி எழுத முடியும்?
எனவே உயிர்த்தெழுந்த நிகழ்வு சந்தேகத்திற்குள்ளாகிறது.பல கேள்விகளுக்கு விடை இல்லை."உயிர்த்தெழுதல்" என்ற ஒன்றை நிரூபிக்க முயன்றிருக்கின்றனர்."கிறிஸ்து" எனப்படும் "மேசியாவை" காண யூத மக்கள் ஆர்வத்தோடு ஏங்கி கொண்டிருந்த காலம் அது.பல பேர் "நான்தான் கிறிஸ்து" என்று அறிவிப்பு செய்து காணாமல் பொய் இருக்கின்றனர்.

இந்த பல பேர்களில் "இயேசுவும் ஒருவர்" என நான் நினைக்கின்றேன்.மேற்கூறியவாறு கிளம்பும் ஒவ்வொருவரும் தங்களுக்கென சீடர்களை, அதாவது பின்பற்றுபவர்களை, உருவாக்கிக்கொண்டனர். அதன் விளைவு இன்று நாம் இயேசுவை கடவுளாக வழிபாடும் நிலைமைக்கு வந்திருக்கின்றோம்.

நற்செய்தி புத்தகங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வசனங்களில் ஒன்று,இயேசு பாடு பட வேண்டும் என்றும்,மரிக்க வேண்டும் என்றும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்பதாகும்.ஆனால் இம்மாதிரியான வசனங்கள் எதுவும் பழைய ஏற்பாட்டில் கிடையாது.

நான்கு நற்செய்தி புத்தகங்களின் அடிப்படையில் உயிர்த்தெழுதல் நிகழ்வை அட்டவணைப்படுத்தி இருக்கின்றேன்.நீங்களே முரண்பாடுகளை பாருங்கள்.எவ்வித கொள்கையையும் சாராமல் நடுநிலைமையோடு ஆராய்ந்து பாருங்கள்.

அட்டவணையை பதிவிறக்கம் இங்கே செய்து கொள்ளுங்கள்.


பழைய ஏற்பாடு என்பது ஒரு கடவுளை பற்றி மட்டும்தான் பேசுகிறது.ஆனால் புதிய ஏற்பாடு,"அந்த கடவுள் இயேசுதான்" என்று நிரூபிக்க முயல்கிறது.தன்னை தெளிவாக வெளிப்படுத்தி காட்டி உள்ளார் கடவுள்.அவர் "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு போன்றவர்கள் வழிபட்ட கடவுள் ஆவார்.அவரையே நாமும் தொழுது கொள்வோமாக.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:


Monday, June 3, 2019

தமிழ் பைபிளின் மாபெரும் மொழிபெயர்ப்பு தவறு

 தமிழ் பைபிளின் மாபெரும் மொழிபெயர்ப்பு தவறு 


பைபிள் என்பது கடவுள் அருளிய வார்த்தைகள் அடங்கிய புத்தகம்.மிகவும் போற்றப்படத்தக்கது என்று நாம் நினைக்கிறோம்.அது உண்மைதான்.ஆனால் பைபிளை பல மொழிகளில் மொழிபெயர்க்கும் பொழுது தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன.

மொழிபெயர்ப்பு தவறுகள் இருக்கின்றன என்று நீங்கள் எந்த தீவிர கிறித்தவர்களிடமாவது கூறினால் அவர்கள் மிக கடும் கோபம் கொள்வார்கள்.அக்கருத்து உண்மைதானா என்று கூட ஆராய்வதற்கு மனதில் இடம் கொடுக்காமல் எதிர்ப்பார்கள்.

சரி,மொழிபெயர்ப்பு தவறு இருப்பதாலேயே பைபிள் தவறு என்று ஆகிவிடுமா?ஆகாது என்பது நமக்கு தெரியும்.எந்த மொழியில் பைபிள் எழுதப்பட்டது அம்மொழியில் நாம் பைபிளை படித்து பார்க்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு தவறுகள் சிறு பிழைகளை ஏற்படுத்தினால் நாம் சகித்து கொள்ளலாம்.ஆனால் கடவுளையே மாற்றினால் எப்படி சகித்து கொள்வது? உண்மையான கடவுளை வழிபடுவதிலிருந்து நம்மை திசை திருப்புவதற்கு இவ்வகையான மொழிபெயர்ப்பு தவறுகள் உதவியிருக்கின்றன.

அவ்வாறான ஒரு மிகப்பெரும் தவறை நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.நீதி:30:19,20 வசனங்களை படிப்போம்.
அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.
அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். 
இவ்வசனங்களின் பொருள்:

ஆகாயத்தில் செல்லும் ஒரு கழுகு தடத்தை விட்டு செல்லுமா?அதாவது நீல நிற வானத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.ஒரு கழுகு பறந்து சென்று கொண்டிருக்கிறது.அது சென்று கொன்றிக்கும் பாதையை உங்களால் ஒரு வரைபடமாக கூறமுடியுமா?ஜெட் விமானங்கள் பறந்து செல்வதை பார்த்திருப்பீர்கள்.ஒரு வெள்ளை நிறக்கோடு அவ்விமானம் செல்லும் இடமெல்லாம் இருப்பதை கண்டிருப்பீர்கள்.அது போல் கழுகு விட்டு செல்லுமா?இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.அதாவது அந்த கழுகு எங்கு சென்றது,எப்படி சென்றது என்பது நமக்கு தெரியாது.

பாறையின் மேல் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்திருக்கிறீர்களா?அந்த பாம்பு தான் சென்றதற்கான தடத்தை அந்த பாறையின் மேல் விட்டு செல்லுமா?செல்லாது என்பதும் நமக்கு தெரியும்.ஏனென்றால் பாறையின் மீது மண் இருக்காது.




நடுக்கடலில் செல்லும் கப்பலும் கூட தான் சென்று கொண்டிருக்கும் தடத்தை விட்டு செல்லாது.

இவைகளை கண்டு, இந்த நீதிமொழிகளை எழுதிய யாக்கேயின் குமாரன் ஆகூர் ஆச்சரியப்படுகிறான்.ஆனால் இதற்க்கு பின்னர் இவன் கூறியதுதான் மிகவும் கவனிக்க வேண்டியது.மேற்கூறிய அந்த மூன்றைப்போல் ஒரு விலைமாதுவும் தான் சென்று வந்த வழிகளை விட்டு செல்ல மாட்டாள்.தான் எங்கும் செல்ல வில்லை என்று பொய் சொல்லுவாள்.கண்டுபிடிக்க நமக்கும் வழி இருக்காது.

யாக்கேயின் குமாரன் ஆகூர் கூறும் கருத்து என்னவென்றால்,விபச்சார பெண் மிகவும் மோசமானவள்.எந்த பொய் வேண்டுமானாலும் கூறுவாள்.அவளை நம்பி செல்லாதே! இதுதான் கருத்து.

இதில் எங்கே தவறு உள்ளது? சரியாகத்தானே மொழிபெயர்த்துள்ளார்கள்.கழுகு,பாம்பு,கப்பல் இம்மூன்றுக்கும் அடுத்து ஒன்றை அவர் குறிப்பிடுகிறார்.அது,"ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே".இங்குதான் தவறு உள்ளது.

என்ன தவறு?:

மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளை நாம் முதலில் பார்த்து விடுவோம்.முதலில் NIV
the way of an eagle in the sky,    the way of a snake on a rock,the way of a ship on the high seas,    and the way of a man with a young woman.
“This is the way of an adulterous woman:    She eats and wipes her mouth     and says, ‘I’ve done nothing wrong.’
தற்போது யூத பைபிள் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.
the way of an eagle in the sky,    the way of a snake on a rock,    the way of a ship on the open sea,    and the way of a man with a girl.

his is how an unfaithful wife behaves:    she eats, wipes her mouth, and says, “I did nothing wrong.” 

தற்போது KJV பைபிள் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை பாப்போம்.
The way of an eagle in the air; the way of a serpent upon a rock; the way of a ship in the midst of the sea; and the way of a man with a maid.
Such is the way of an adulterous woman; she eateth, and wipeth her mouth, and saith, I have done no wickedness. 
மூன்று வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் மேலே தரப்பட்டுள்ளது.கூர்ந்து கவனியுங்கள்.சிகப்பு கலரில் நான் கட்டியுள்ள வார்த்தை என்னவென்று பாருங்கள்.
  • NIV பைபிள் கூறுகிறது "a young woman- ஓர் இளம் பெண்".
  • யூத பைபிள் கூறுகிறது "a girl - ஓர் இளம் பெண்".
  • KJV பைபிள் கூறுகிறது "a maid - ஓர் இளம் பெண்.
  • தமிழ் பைபிள் கூறுகிறது "கன்னிகை".

"ஓர் இளம் பெண்" என்பதை மூன்று மொழிபெயர்ப்புகளும் ஒத்து கொள்கின்றன."ஓர் இளம் பெண்" என்பவள் மனமானவளாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.


ஆனால் ஒரு "கன்னி" அல்லது "கன்னிகை" என்பவள் உறுதியாக மணமாகாதவளாக மட்டுமே இருக்க முடியும்.ஆங்கில மொழியானது மணமாகாத பெண்ணை "virgin" என்று கூறுகிறது.தமிழ் "கன்னி" என்று கூறுகிறது.ஹீப்ரு மொழி "Betulah" என்று கூறுகிறது.

அப்படியென்றால் தமிழ் பைபிள் கூறுவது போல் "கன்னிகை" என்ற வார்த்தைக்கு பதிலாக NIV,KJV மற்றும் யூத பைபிள்களில் அதற்குரிய வார்த்தைகளாக "virgin","Betulah" என்றுதானே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.அப்படி இல்லையே.என்றால் எது தவறு? தமிழ்தான்!!!

காரணம்:

ஹீப்ரு மொழியில் நீதி:30:19 வசனமானது "Almah" என்ற வார்த்தையை கொண்டுள்ளது.இதனுடைய பொருள் "ஓர் இளம் பெண்" என்பதாகும்.ஏன் இது முக்கியமாக படுகிறது?
  • ஒரு இளம் பெண், அதாவது "Almah",  மனமானவளாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.நாம் கண்டுபிடிக்க முடியாது.
  • ஆனால் ஒரு "கன்னிகை" கண்டிப்பாக மணமுடிக்காதவளாகத்தான் இருக்க வேண்டும்.
இந்த நீதிமொழியை எழுதியவர் "ஓர் இளம் பெண்ணத்தைத்தான்" குறிப்பிடுகிறார்.ஏன்?

ஏனென்றால் ஒரு கன்னிகை என்பவள் விபச்சாரியாக இருக்க முடியாது.விபச்சாரியாக அவள் இருந்தால் அவள் கன்னிகை இல்லை.ஒரு கன்னிகை ஒரு புருசனுடன் இணையும் பொழுது அவள் தடத்தை விட்டு செல்ல வேண்டும்.முதன் முதலாக இருவரும் இணையும் பொழுது அவளுக்கு "கன்னி சவ்வு" கிழிந்து இரத்தம் வெளிப்படும்.

அவள் கன்னி என்பதற்கு அடையாளம் இதுதான்.உபா 22:13-20 வசனங்கள் இதை தெளிவாக கூறுகின்றன.

ஒரு "விலை மாது" அல்லது "உண்மையில்லாத மனைவி" தவறு செய்து விட்டு,தன் தவறுக்கான அடையாளத்தை துடைத்து மறைத்து விடுவாள்.ஏனென்றால் அவளுக்கு இரத்தம் வராது.மிக சாதாரணமாக "நான் ஒரு தவறும் செய்ய வில்லையே" என்பாள்.இதைத்தான் யாக்கேயின் மகன் ஆகூர் விவரிக்கிறான்.

எனவே தமிழ் பைபிள் கூறுவது போல் "கன்னிகை" என்று எடுத்து கொண்டால் மிகப்பெரும் தவறு ஆகும்.மேலும் மற்ற பைபிள்கள் அனைத்தும் சரியாக "ஓர் இளம் பெண்" என்று மொழி பெயர்த்திருக்கும் வேளையில் தமிழ் பைபிள் தவறாக "கன்னிகை" என்று மொழிபெயர்த்திருக்கிறது.

இது ஏன் கவனிக்கப்பட வேண்டும்?:

எழுத்துக்களில் பிழை என்றால் திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு.பொருளில் தவறு ஏற்பட்டால் பெரும் பிழை ஆகி விடும்.இங்கே பொருள் பிழைதான் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நீதி மொழியை எழுதியவர் ஆச்சரியத்திற்குரிய மூன்று செய்திகளை தருகிறார்.நமக்கும் அது ஆச்சரியமாக உள்ளது.நாம் இச்செய்திகளை கவனித்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.

கன்னிப்பெண் என்பவள் மிகவும் முக்கியமானவள்."பெண்" என்பவள் வேறு "கன்னிப்பெண்" என்பவள் வேறு.

தமிழ் மொழிபெயர்ப்பு பெரும் பொருட்பிழையை ஏற்படுத்தி விட்டது.இம்மாதிரியான பிழைகள் நிறைய உள்ளன.கடவுள் என்பவர் ஒருவரே! அவர் இஸ்ரயேலின் கடவுள் ஆவார்.இஸ்ரேல் மக்கள் "ஒரு கடவுள்" வழிபாட்டை கொண்டிருந்தனர்.ஏறத்தாழ மற்ற அனைவரும் "பல கடவுள்" வழிபாட்டைக் கொண்டிருந்தனர்.

பல கடவுள் வழிபாட்டை கொண்டிருந்த கிரேக்க,ரோம அரசுகள் இஸ்ரயேல் மக்களை அடிமை படுத்திய பொழுது அவர்களின் தாக்கம் ஏற்பட்டது.ஆனாலும் இஸ்ரயேல் மக்கள் உறுதியாக "ஒரு கடவுள்" வழிபாட்டை பின்பற்றிய பொழுது,அதை மாற்றுவதற்கு கடைபிடித்த தந்திரம்தான் "புதிய ஏற்பாடு".

மொழிபெயர்ப்பு தவறுகள் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்தான் உள்ளது. ஹீப்ரு மொழியில் இருந்து பழைய ஏற்பாட்டை பொழுது "இயேசுவை" வழிபட  செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல "வேண்டுமென்றே செய்ய பட்ட மொழிபெயர்ப்பு தவறுகள்" உள்ளன.

முடிவு:

இது போல் நிறைய மொழிபெயர்ப்பு பிழைகள் தமிழ் பைபிளில் உள்ளது.யூத பைபிளான பழைய ஏற்பாடு மட்டுமே கடவுளுடைய வார்த்தைகளை கொண்டுள்ளது.புதிய ஏற்பாடு கிரேக்க மற்றும் ரோம கதைகளுடைய கலவைகளே.அவைகள் இஸ்ரயேலின் கடவுளிடமிருந்து நம்மை பிரிப்பதற்காக எழுதப்பட்டவைகள்.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

Saturday, June 1, 2019

புதிய ஏற்பாட்டு குழப்பங்கள்

புதிய ஏற்பாட்டு குழப்பங்கள் 


புதிய ஏற்பாடு என்பது ஒரு ஏமாற்று வேலை,கிட்டத்தட்ட. கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய புத்தகமான பழைய ஏற்பாட்டுக்குள் இந்த புதிய ஏற்பாடு எப்படி வந்தது?புதிய ஏற்பாடு உண்மையில் கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகம்தான் என்றால் கீழ்க்கண்ட கேள்வி பதிலை கவனியுங்கள்.ரபி Tovia Singer என்பவருடைய "OUTREACH JUDAISM " என்ற பக்கத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

கேள்வி:ஏறத்தாழ 6000 கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகள் இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.139,000 வார்த்தைகள் மட்டுமே கொண்ட கிரேக்க புதிய ஏற்பாட்டில் ஏறத்தாழ 400,000 முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறி உள்ளீர்கள்.ஆனால்,Prof. Bruce Metzger என்பவருடைய கூற்று படி தற்போதுள்ள புதிய ஏற்பாடு உண்மையான புதிய ஏற்பாட்டு பிரதியுடன் 95 சதவீதம் ஒத்துப்போவதாக கூறியுள்ளார்.உங்கள் பதில்?

பதில்:புதிய ஏற்பாட்டின் வார்த்தைகள் பற்றி ஆராய்வதில் இந்த 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்தவர்களுள் ஒருவர் Prof.Bruce Metzger. அவருடைய படைப்புகளில் முழுவதையும் நீங்கள் படிக்காவிடில் அவருடைய கருத்துக்களை உங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

தற்போது வரை சுமார் 6000 கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகளை நாம் கண்டு பிடித்திருக்கிறோம்.அவற்றுக்கிடையே எவ்வளவு தவறுகள் உள்ளன என்று நமக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை.இருப்பினும்,அது ஏறக்குறைய 400,000 என்ற அளவில் உள்ளது.அதாவது,புதிய ஏற்பாட்டில் எவ்வளவு எழுத்துக்கள் மொத்தமாக உள்ளனவோ,அதை விடவும் அதிகமாக.

இந்த தவறுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான தவறுகள் எழுதியவர்களுடைய தவறுகளாகத்தான் உள்ளன.ஆனாலும் இந்த தவறுகளை சரி செய்ய முடியுமா?உண்மையான,முதன் முதலாக எழுதப்பட்ட பிரதி இருந்தால் நம்மால் சரி செய்ய இயலும்.ஆனால் இன்று வரை உண்மையான பிரதி கண்டு பிடிக்கபடவே இல்லை!!

தவறுகளில் பெரும்பானவைகள் ஆரம்பத்தில் எழுதியவர்களால் ஏற்பட்டிருக்கிறது.பின்னர் எழுதியவர்கள் நன்றாக எழுதி உள்ளனர்.நாம் கவனிக்க வேண்டியது,ஏறத்தாழ 90 சதவீதம் தவறுகள் சிறிய தவறுகள்தான்.அதாவது,360,000 தவறுகள் கண்டுகொள்ளப் படவேண்டியவைகள் அல்ல.ஆனால்,40,000 தவறுகள் அப்படி அல்ல.அவைகள் தீவிரமான தவறுகள்.இதையும் பாதியாக குறைத்தோமானால்,20,000 தவறுகள்.20,000 தவறுகள் என்பது சிறிய செய்தி அல்ல.

புதிய ஏற்பாட்டில் 139,000 வார்த்தைகள் மட்டுமே உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.புதிய ஏற்பாடு என்பது கடவுளால் அருளப்பட்டது என்றால் இவ்வாறு இருக்க அவர் விரும்பியிருப்பாரா? புதிய ஏற்பாடு உண்மையில் கடவுள் அருளியது என்றால்,ஏன் அவர் அதை பாதுகாக்க வில்லை?

எழுத்துக்களை எப்படி கடவுள்  பாதுகாப்பார்? என்று நீங்கள் கேட்கலாம்.புதிய ஏற்பாட்டை விட பெரிதும்,பழமையானதுமாகிய பழைய ஏற்பாட்டை கடவுள் அப்படி பாதுகாத்திருக்கிறாரே?முழு பாளை ஏற்பாடும் அப்படியே உள்ளது(Torah என்று அழைக்கப்படக்கூடிய ஐந்து ஆகமங்கள்)அனைத்து 304,805 எழுத்துக்களும் அப்படியே பாதுகாக்க பட்டுள்ளது.

சரி,5-லிருந்து 10 சதவீதம் வரையிலான புதிய ஏற்பாட்டு தவறுகள் எந்த அளவிற்கு தவறானவைகள்? சில தவறுகள் மிக தீவிரமானவைகள்.சிலவற்றை பார்ப்போம்.
  • திரித்துவக்கொள்கையானது  1 யோவான்:5:7-8 வசனங்களில் தரப்பட்டுள்ளதா? இதற்க்கு பதில் எந்த பிரதியை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.[காரணம்,பல பிரதிகளில் இந்த வசனம் கிடையாது]
  • மாற்கு எழுதிய நற்செய்தி புத்தகத்தில்,இயேசு உயிரோடு எழும்பிய பின்னர் அவருடைய சீடர்கள் யாருக்காவது காட்சியளித்தாரா? இதற்கும் பதில்,  எந்த பிரதியை நீங்கள்  என்பதே!ஆரம்ப கால பிரதிகளில் "காட்சியளித்தல்" நிகழ்வு என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.மாற்கு எழுதிய நற்செய்தி புத்தகத்தை பிரதி எடுத்த பிற்கால எழுத்தர்கள்,இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் தன்னுடைய சீடர்கள் எவருக்கும் காணப்படவில்லை என்பதை குறித்து கவலை அடைந்திருக்கலாம்.அவர்களால் பிற்சேர்க்கை செய்யப்பட்டதுதான் கடைசி 12 வசனங்கள்.[மாற்கு 16:9-20]
  • கெத்சமெனே தோட்டத்தில் வியாவை துளிகள் இரத்தமாக விழும் அளவிற்கு இயேசு வேதனை கொண்டிருந்தாரா?இதற்கும் பதில்,எந்த பிரதியை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.பிற்கால எழுத்தர்கள்,இயேசுவின் பாடுகளை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதற்காக சேர்த்திருக்கலாம்.[லூக் 22:43-44]
  • இயேசு ஒரு விபசார பெண்ணைக் கண்டு "உங்களில் பாவமில்லாதவன் இவள் மீது முதலாவது கல்லெறியட்டும்" என்று கூறினாரா? மேலும்  சாட்டினவர்கள் அனைவரும் சென்ற பின்னர்,"நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறதில்லை,இனி பாவம் செய்யாதே, போ" என்று கூறினாரா?இதற்க்கு பதில்,யோவான் எழுதிய புத்தகத்தின் எந்த பிரதியை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.ஆரம்ப கால பிரதிகளில் இது கிடையாது.பின்னர் இது சேர்க்க பட்டது.
  • இயேசு உயிரோடு எழுந்த பின்னர்,தன மீது விசுவாசம் கொள்ளும் அனைவரும் விஷம் அருந்தினாலும்,பாம்புகள் தீண்டினாலும் சாக மாட்டார்கள் என்று கூறினாரா?இதுவும்,மாற்கு எழுதிய புத்தகத்தின் எந்த பிரதியை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.
  • 1கொரிந்தியர் 14:34-35 வசனங்களில்,"பெண்கள் சபைகளில் அமைதியுடனும் கணவனுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் "என்று கூறப்பட்டுள்ளது.ஆரம்ப கால பிரதிகளில் இந்த வசனம் கிடையாது.பெண்களை அடக்கி அவர்களுக்குரிய இடத்தில் அவர்களை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிற்கால எழுத்தார்களால் இது சேர்க்க பட்டது.
நான் கூறியதை எந்த கிறித்துவ ஆராய்ச்சியாளரும் நம்ப போவது இல்லை.ஆராய்ச்சியாளர்களை கொண்டு உருவாக்கப்பட்ட எந்த பைபிளிலும் நீங்கள் இப்பிழைகளை காண இயலும்.முக்கியமாக Prof. Bruce Metzger அவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பைபிள்களில்.

மிக சிறிய அளவு பிழைகளை மட்டுமே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.தவறுகளின் அளவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.நேரம் கிடைத்தால்,நூற்றுக்கணக்கான தவறுகளை விளக்க காத்திருக்கிறேன்.தவறுகளையும் பொய்களையும் உருவாக்குபவரா கடவுள்?

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
  கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும்,இருதயத்தைச்             சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும்,  கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.[சங் 19:7-8]

மொழிபெயர்த்தவர்:இரா.இருதயராஜ்.
Ref :
https://outreachjudaism.org/400000-variants-in-the-nt-greek-manuscript/

இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1NowNoNa8jQ7LEk7jT3DjhF4_h0xrwfW2/view?usp=sharing

My Posts